பேசும் பிஞ்சு குழந்தையின் புத்தகப்பை: செம்மணி கொடூர கொலைகளின் மறுபக்கம்
சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு மனதில் பாரிய ரணத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் தான் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் புத்தகப்பை.
அது துணியால் தைக்கப்பட்ட வெறும் புத்தகப்பை மட்டும் அல்ல, இரக்கமற்ற உண்மைகளை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டுகிற வலி நிறைந்த சாட்சியம்.
ஒரு சின்ன பிஞ்சின் ஒட்டு மொத்த கனவுகள் மற்றும் ஆசைகள் என அனைத்தும் பலவந்தமாக முடக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒரு கொடூரத்தின் மறுபக்கம்.
தமிழர் துயர் வரலாற்றின் வலி நிறைந்த பக்கத்தில் யாழ், செம்மணி மனித புதைக்குழி என்பது எவராலும் மறக்க முடியாத ஒரு சுமை நிறைந்த பக்கம்.
நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் ஈவிரக்கமின்றி குழந்தை மற்றும் பெரியவர் என எவ்வித பேதமும் இல்லாமல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு மண்ணுக்குள் கொன்று புதைக்கப்பட்டனர்.
காலம் கடந்தாலும் புதைக்கப்பட்ட உறவின் கதறல்கள் ஆறாமல் தொடர்கின்ற நிலையில் தான் அண்மையில் இடம்பெற்ற அகழ்வில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடுகளுக்கு அருகில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்கள், ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற புத்தகப்பை என்பன கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த புத்தகப்பையை பிடிந்திருந்த பிஞ்சு குழந்தை மீண்டும் பாடசாலை செல்லவில்லை, வீடு திரும்பி கட்டியணைக்க காத்திருந்த தன் தாய் தந்தை முகத்தை மறுபடி காணவில்லை, நண்பர்களுடன் விளையாட அந்த கால்கள் மைதானத்திற்கு திரும்ப ஓடவில்லை, கண்ட கனவுகள் மற்றும் அழகிய ஆசைகள் எல்லாம் ஒரு நொடியில் சுக்குநூறாக முடிந்து போகும் என எவ்வித சிந்தனையும் இல்லை.
சுதந்திரமாக சுற்றி திரிய வேண்டிய வயதில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அந்த குழந்தையின் அழுகுரலும் இரத்த கறையும் இன்று புத்தகப்பையுடன் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது.
நாட்டில் இனப்படுகொலை இல்லை, நீதிக்கான போர்த்தான் நடந்தது எனும் அரசிடம் சில கேள்விகள்:
01. எது நீதி, போர் என்றால் என்னவென்று இன்னும் எழுத்து கூடக் கணிக்காத பிஞ்சுக் குழந்தைகளைத் தடுத்து வைத்து கொன்று மண்ணுக்குள் புதைத்ததா ?
02. எது நீதி, கைகளை பிடித்து வளர்த்த தாய், தந்தை, அண்ணன், சகோதரி மற்றும் சகோதரனை நேருக்கு நேர் பார்த்தபடி சீரழிக்கப்பட்டு அந்தக் கண்களில் நீர் வடிய கொன்று புதைக்கப்பட்டதுவா ?
03. எது நீதி, ஒரு இனத்தையே அடியோடு அழித்து கொத்து கொத்தாக ஆணும் பெண்ணும் குழந்தைகளும் அப்பாவியாக கொல்லப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதா ?
தாயகம் எங்கும் பிணக்குழிகளுக்கு கீழ் கதறும் அந்த நிசப்த குரல்களை நீதி என கூறி மறைக்க முற்படுவது கொடூரத்திலும் கொடூரமாகும்.
அரசு மறைத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள், மக்கள் கடந்தாலும் இரத்த கரை படிந்த மண் மறக்காது வலிகளின் சுமைகளை, அந்த மண் பேசும் வரை உண்மையான நீதிக்கான கேள்வி என்பது எழுந்துகொண்டேதான் இருக்கும்.
ஒரு புத்தகப்பை தானே என இலகுவில் கடந்து செல்ல முடியாது காரணம், இன்றைய குழந்தைகள் சுத்திரமாக விடுதலையாக விளையாடும் பொழுது, இந்த புத்தகப்பை எங்கேயோ ஒரு அடக்குமுறை காலத்தில் ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தையின் வாழ்வின் கடைசி சின்னமாக மாறியுள்ளது.
இது நீதிக்கான போராட்டத்திற்கு புதிய அத்திவாரத்தை பலமாக இடுவதுடன் மறைக்கப்பட்ட படுகொலைகளை, உண்மைக்கான குரல்களை புழுதியில் புதைத்து யாராலும் முடித்து விட முடியாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
அந்த குழந்தையின் புத்தகப்பை இன்று நீதிக்கான ஒரு புதிய பக்கத்தை திறந்து வைத்துள்ளதுடன் சிதைக்கப்பட்ட அந்த குழந்தையின் கனவுகளுக்கு கொடூரர்கள் பதில் சொல்ல வேண்டிய தேவையையும் கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நூற்றாண்டு கடந்தாலும் புதையாத உண்மைகளை உலகுக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் புத்தகப்பை நினைவூட்டியுள்ளதுடன் மறைந்த வலி நிறைந்த வரலாற்றின் சத்தமாய்தான் இன்று ஒலித்துள்ளது.
மறைந்த குரல்களுக்கான நீதியைத் தேடி ஓடும் சாட்சியங்களில் அந்த புத்தகப்பை கடந்து விட முடியதாக ஒரு சுமையான பக்கம் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
🛑 இது கண்டுபடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அடிப்படையில் செயற்கையாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
