ஈரான் மீதான போர் நடந்திருக்கக் கூடாது: இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த சீனா
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியக் கூட்டு இராணுவத் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது எனச் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விரோதப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மீண்டும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிராந்திய நெருக்கடி
இந்தநிலையில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பிராந்திய நெருக்கடிக்குத் தீர்வாகாது என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இராணுவ வழிமுறைகள் ஒருபோதும் சிக்கலைத் தீர்க்காது, பலமான முஷ்டி என்பது பலமான நியாயம் என்று அர்த்தமல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், உலகம் மீண்டும் காட்டுச் சட்டத்திற்கு (Law of the jungle) திரும்ப முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஈரானிய அரசாங்கத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் சீனா எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட முயற்சிகள் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அதற்குப் பதிலடியாக ஈரான் பிராந்தியமெங்கும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்த மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் சீன அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |