ஈரானுடனான ஒப்பந்தம் சிஐஏ பணிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஈரானுடனான ஒப்பந்தம் குறித்தும், குறிப்பாக அணுசக்தி தொடர்பான தொடர்ச்சியான சலுகைகளை வழங்க தெஹ்ரான் தயாராக உள்ளதா என்பது குறித்தும் தங்களுக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாக சிஐஏ பணிப்பாளர் ஜான் ராட்க்ளிஃப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று ஆக்சியோஸ் வெளியிட்ட செய்தியில், ராட்க்ளிஃப், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியதாகவும், அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்கத் தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இதற்கு ஆதரவாகப் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து கலந்துரையாட, ட்ரம்பும் அவரது ஆலோசகர்களும் தொடர்ச்சியான உயர்மட்டக் கூட்டங்களை நடத்தியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் முரண்பாடான தகவல்கள்
அந்தக் கூட்டங்களின் போது, ஈரானிய அதிகாரிகள் இந்த ஒப்பந்தம் குறித்து தங்களுக்குள் விவாதித்த விதம், "மத்தியஸ்தர்களிடமும் அமெரிக்காவிடமும் அவர்கள் கூறியதற்கு முரணாக" இருந்ததாகக் காட்டும் உளவுத் தகவல்களை ட்ரம்பும் அவரது குழுவும் ஆய்வு செய்ததாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

வோஷிங்டன் கோரிய அணுசக்தி தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் ஒப்புக்கொள்ளுமா என்பது குறித்து அந்த உளவுத் தகவல்கள் சந்தேகங்களை எழுப்புவதாக ராட்க்ளிஃபும் ரூபியோவும் வாதிட்டனர்.
இறுதி முடிவை எடுப்பவர்
"எந்தவொரு பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி ட்ரம்ப் அனைத்துக் கருத்துக்களையும் கேட்கிறார் -- ஆனால், அவரே இறுதி முடிவை எடுப்பவர் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்," என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

"ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது, அவர்கள் தங்களின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்க முடியாது, மேலும் உலகின் எரிசக்தி விநியோகத்தை பணயக்கைதியாக வைத்திருக்க முடியாது என்பதை உறுதி செய்வதன் மூலம், இந்த ஒப்பந்தம் நிர்வாகம் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் அனைத்து சிவப்பு கோடுகளையும் பூர்த்தி செய்கிறது," என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |