சலேவின் மனைவிக்கு சிஐடி பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு!
முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்ட ஆலோசனை வழங்குவதற்கான கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) நிராகரித்துள்ளது.
இந்தத் தீர்மானம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் சந்தேக நபரின் மனைவி மனோரி சலேவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஐடி காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சட்ட ஆலோசனைகள்
தனது கணவர் வைத்தியசாலையில் இருக்கும் காலப்பகுதியில் அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்தன வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சலே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதால், தற்போதைய கட்டத்தில் தினசரி சட்ட ஆலோசனைகள் அவசியமில்லை என்று சிஐடி பணிப்பாளர் தனது உத்தியோகபூர்வ கடிதத்தில் விளக்கியுள்ளார்.
மேலும், சட்டத்தரணியின் அடிக்கடி வருகை தருவது சந்தேக நபரின் உடல்நல தேறலையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கலாம் என்ற ஆரோக்கிய ரீதியான காரணங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சலே குடும்பத்திற்கு அனுமதி
தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவுகளின்படி, குறிப்பிட்ட சட்டத்தரணி வாரத்திற்கு ஒரு முறை, அதாவது புதன்கிழமைகளில் மட்டும் சந்தேக நபரைச் சந்திக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டத்தரணிக்கான தினசரி சந்திப்புக் கோரிக்கையை ஏற்க முடியாது என்றாலும், சலேயின் மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளிட்ட அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அவரைத் தினமும் சந்திக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்