சாத்தியமற்ற வாக்குறுதி தந்து ஏமாற்ற மாட்டேன்...! முதல் உரையில் உறுதியளித்த முதலமைச்சர் விஜய்
தமிழக ஆளுநரிடம் முறைப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கையோடு தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜய், தற்போது தனது முதல் உரையை ஆற்றியுள்ளார்.
குறித்த உரையில் மேலும் தெரிவித்த அவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
வறுமை என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், பசியென்றால் என்னவென்று எனக்குத் தெரியும்.
சாத்தியமற்ற வாக்குறுதி
உங்களில் ஒருவன் தான் உங்கள் மகன், உங்கள் அண்ணன் மற்றும் உங்கள் தம்பி.
இந்த தேர்தல் களத்தில் நான் இறங்கியபோது நான் அதிக அவமானங்களையும் வலிகளையும் சந்திக்க நேரிட்டது.
அது என்னை மட்டுமல்ல என் மக்களாக உங்களையும் பாதித்தது ஆனால் அதையெல்லாம் தாண்டி எனக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி.

இத்தனைப் போராட்டங்களைக் கடந்து இன்று C.ஜோசப் விஜய்யாகிய நான். என்ற கூற்றை உண்மையாக்கியிருக்கின்றீர்கள்.
நான் தேவதூதன் ஒன்றும் அல்ல, நானும் ஒரு சாதாரண மனிதன் தான். நான் முன்னரே கூறியது போல சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்ற மாட்டேன்.
என்னால் எது சாத்தியமோ அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.
இத்தனைக் கோடி மக்கள் என்னோடு இருக்கும் போது சாத்தியமற்றது எதுவுமல்ல என்ன வேண்டுமென்றாலும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்.
கடன் தொகை
மிக இக்கட்டான நிலையில் இந்த அரசாங்கத்தை நான் பொறுப்பேற்றிருக்கின்றேன். மிக அதிக கடன் தொகை, திறைசேரியே காலியாகியிருப்பதாகத் தெரிகின்றது.
உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் என்ன இருக்கின்றது இல்லை என்பது. அனைத்தையும் பார்த்த பிறகு என்ன விபரங்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக நான் உங்களுக்கு வெளியிடுவேன்.
இவற்றைச் சரிசெய்ய எனக்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். இது மக்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை மிக உறுதியாக வைத்திருப்பேன்.

போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய முயற்சி இன்றிலிருந்து எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு மற்றும் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன்.
என்னை அவமானப்படுத்தியவர்களாகவே இருந்தாலும் என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும் அவர்களும் என் மக்கள்தானே.
நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் எட்டு கோடி மக்களும் என் மக்கள் தானே.
அடிப்படை விடயங்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சாலை வசதி உள்ளிட்டவற்றில் என்னுடைய முதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று தோன்றுகின்றது.
அரச ஊழியர்கள்
நான் முன்னதாகவே கூறியது போல இந்த விஜய் மக்களது பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன், எனக்கு அது தேவையில்லை.
தவறு செய்ய யாரையும் விடவும் மாட்டேன், அப்படியொரு எண்ணம் இருந்தால் இன்றே அதை அழித்து விடுங்கள்.
பெண்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நன்றாக இருப்போம், நன்றாகவே இருப்போம்.

சிறுபான்மை இன மக்கள் எந்தக் காலத்திலும் துயருறக் கூடாது. எப்போதும் அனைவருக்காகவும் இந்த விஜய் இருப்பேன்.
அடுத்தது இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா நண்பீஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றியை நான் சொல்லியே ஆக வேண்டும்.
உங்களுடைய எதிர்காலத்திற்காக நான் உழைப்பேன். தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு எனது பெரிய நன்றிகள். நீங்கள் எனது உயிர்.
வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய ஆட்சியை அமைத்திடுவோம்" எனப் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |