கொழும்பு மாநகர சபையில் வெற்றியை உறுதி செய்த அநுர தரப்பு
புதிய இணைப்பு
கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் மட்டுமே பெறப்பட்டன.
முதலாம் இணைப்பு
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (31) இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், கொழும்பு மாநகர சபையின் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று(30) செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இன்று இரண்டாவது முறையாக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க தங்கள் குழு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கம் சம்பந்தப்பட்ட வரவுசெலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கலந்து கொள்வதைத் தடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்கெடுப்பு
இவ்வாறானதொரு பின்னணியில், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று அரசாங்க தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அரசாங்க தரப்பால் சமர்பிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி 3 வாக்குகளால் பெரும்பான்மையாக தோற்கடிக்கப்பட்டது.
அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |