சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றில் டக்ளஸ்...! சீறும் கஜேந்திரகுமார் அணி
டக்ளஸ் தேவானந்தா சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிஇ பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவரிடம் இருந்த கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டத்தரணி க.சுகாஷ் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது.
சர்வதேச குற்றவாளி
அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டு குழுவாக இயங்கி தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும் கடத்தல்களுக்கும் காணாமல் ஆக்கப்படுத்தலுக்கும் வன்புணர்வூகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இலங்கையின் ஆகப்பெரும் குற்றவாளிகளில் முதன்மையானவராவார். அவர் சர்வதேச யுத்த குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவர் என க.சுகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தா, உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்பட குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேச குற்றவாளி.
அவருக்கு எதிராக சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி, அவர் ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மட்டுமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம்.
மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ அவர் வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டு அக்காலத்தினுள் அக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் ஜே.வி.பி. - என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |