நிலக்கரி கொள்வனவு மோசடிகள்! பொதுமக்களிடமிருந்து திரட்டப்படவுள்ள தகவல்கள்
2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து திரட்ட தீர்மானித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி செயல்முறை தொடர்பாகப் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் செயலாளர் பி.வி. பந்துலசேன தெரிவித்துள்ளார்.
தகவல்களை வழங்க விரும்புவோர், கொழும்பு 12, சஞ்சி ஆராச்சி வத்தை, நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள அளுத்கடை நீதிமன்ற வளாகத்தின் 5வது மாடியில் உள்ள விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.
பிரத்யேக மின்னஞ்சல்
அத்துடன், எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் தகவல்களைச் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக கணக்காய்வாளர் நாயகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து தரவுகளைத் திரட்டும் பணிகளை ஆணைக்குழு ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
முழு அதிகாரங்களையும் கொண்ட இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையில் இயங்குகிறது.மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |