அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா! பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி - பகிரங்க குற்றச்சாட்டு
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உடன்படிக்கைகளின் ஊடாகவே, கொழும்புத் துறைமுக விவகாரத்தில், இந்திய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பிலுள்ள இலங்கையின் மிகமுக்கிய வர்த்தக துறைமுகமாகிய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், துறைமுகம் என்பது நாடொன்றின் மிகவும் வளம் மிக்க ஒரு பகுதியாகும்.
இந்த நிலையில் இந்தியாவுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுப்பதற்கு முடியுமாக இருந்தால் எமக்கு நல்லது, எவ்வாறாயினும் அதனை தம்மால் அபிவிருத்தி செய்து மேலும் மேம்படுத்த முடியும் என பொறியிலாளர்கள் கூறுகின்றார்கள்.
அவர்கள் அவ்வாறு கூறும் போது எமது நாட்டு வளங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வது பொருத்தம் கிடையாது.
வர்த்தக வாய்ப்புக்காகவேணும் அதனை வழங்குவது பொருத்தம் கிடையாது. 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் IOC நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டதன் ஊடாக திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய்த் தாங்கிகளில் 14 ஐ மாத்திரமே தற்போது பயன்படுத்த முடியுமாக உள்ளது.
அவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, துறைமுகத்தை விற்பனை செய்யாது இருப்பதே சிறந்ததாகும். தேசிய சொத்துக்களை விற்பனை செய்யமாட்டோம் என்றே நாம் ஆட்சிக்கு வந்துள்ளோம்.
இதனால் தேசிய வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த விடயத்தில் இந்திய அரசாங்கம் இராஜதந்திர வகையில் சில அழுத்தங்களை வழங்க முடியும்.
இதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும்.
கடந்த அரசாங்கம் உடன்படிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாகவே அதிலிருந்து வெளியே வர எமக்கு கடினமாக உள்ளது என்றார்