கொழும்பில் பதற்ற நிலை!!
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி மையத்தில் இன்று காலை பதற்றமான நிலைமை ஏற்பட்டது. தடுப்பூசிப்பெற வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு நேற்றைய தினம் வத்தளையில் - ஹெந்தல வீதியில் அமைந்துள்ள கெரவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டது. தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினமும் தொடரும் என பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக பலர் இன்று அந்த இடத்திற்கு வந்து அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். எனினும், சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் காலை 9 மணியளவில் அந்த இடத்திற்கு வந்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பிலான அறிவித்தல் பலகை வெளியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவுறுத்தினர். எனினும் அத்தகைய அறிவித்தல் எதுவும் காணப்படவில்லை என பொதுமக்கள் கூறினர். இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தடுப்பூசி வழங்கப்படும் நாட்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என, தடுப்பூசி பெற வந்த பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில தாதியர்கள் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.