உதவி கோரப்பட்டால் இராணுவம் களமிறங்கும் - பாதுகாப்பு அமைச்சு
அமைதியான போராட்டக்காரர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இராணுவ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் திட்டம் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஒய்வுபெற்ற கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டங்கள் தொடர்பில் ஊழல்மிக்க ஆட்சியாளர்கள் வழங்கும் சட்டத்திற்கு முரணான உத்தரவுகள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் சிந்தித்து செயற்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வலியுறுத்தியிருந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இலங்கையில் ஜனநாயக முறைப்படி முன்னெடுக்கப்படும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவப் படைகள் நிறுத்தப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
தேசத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், வன்முறை எழுச்சி ஏற்பட்டால் இலங்கையர்களிடையே அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கும் உதவி கோரப்பட்டால் மாத்திரமே இராணுவம் காவல்துறையினருக்கு உதவும் என பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மத்தியில் சென்று மோதலை தூண்டியோ அல்லது குண்டுவெடிப்பை செய்தோ கூட்டத்தை கலைக்க உளவுத்துறையினர் முயற்சி செய்யலாம் என சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஒய்வுபெற்ற கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டங்கள் என்ற பெயரில் பொதுச் சொத்துக்கள் அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.