தமிழீழ போராட்டத்தில் வீரகாவியமான மாவீரர்களுக்கு புலம்பெயர் நாடுகளில் நினைவேந்தல்! விடுக்கப்பட்ட அழைப்பு
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது விடுதலைக்காக, சமராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறவுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவேந்தல் நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, 24 பேரைச் சேர்ந்த நினைவு அஞ்சலி நிகழ்வு 2026 மே 2 ஆம் திகதி (சனிக்கிழமை) புலம்பெயர் நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு ஒரே நாளில் அனைத்து புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் நடத்தப்படவுள்ளதாகவும், முன்னாள் போராளிகள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் இணைந்து இதனை ஒழுங்குபடுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள இடங்கள் பின்வருமாறு:
பிரித்தானியா: உலகத் தமிழர் வரலாற்று வளாகம், Mill Lane, Oxford, OX17 3QP
பிரான்ஸ்: La Belle Epoque, ZAIQA, 13 Avenue des Entrepreneurs, 95400 Villiers-le-Bel
சுவிற்சர்லாந்து: Schulhausstrasse 9, 4632 Trimbach
அவுஸ்திரேலியா (பேர்த்): Hossack Reserve Pavilion, Lyndale Avenue, Parkwood WA 6147
அவுஸ்திரேலியா (மெல்போர்ன்): VTTC (Palmara Hall), 40–44 Lonsdale St, Dandenong, VIC 3175
அறிக்கை
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்

“தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் வரை உறுதி குலையாது தாம் வரித்துக் கொண்ட தமிழீழ மண் விடுதலைக்காக, சமராடி வீரகாவியமான மாவீரர்களை, உறுதிப்படுத்தி, வெளிப்படுத்தி அவரை மாவீரர் மாண்போடு, தாயகம் மற்றும் தமிழர் வாழும் தேசமெங்கும், தம் நெஞ்சங்களில் நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளை தமிழீழ மாவீரர் பணிமனை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, களமுனையில் செயற்பட்ட போராளிகள் , மாவீரர்களின் உறவுகள், மற்றும் தாயக மக்களின் பங்களிப்போடும், ஒத்துழைப்போடும் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைக்காக இறுதி வரை களமாடி வீரகாவியமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும், புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரும், படைத்துறையின் ஒருங்கிணைப்புத் தளபதியுமான பொட்டு அம்மான், முதுநிலைப் போராளியும், புலனாய்வுத்துறையின் துணைப் பொறுப்பாளரும் மூத்த போராளியுமான கபிலம்மான், நிதித்துறை இளவேனில் வாணிப பொறுப்பாளர் நியூட்டன் , அனைத்துலக செயலக பொறுப்பாளர் காஸ்ரோ, புலனாய்வுத்துறை மகளீர் ஒருங்கிணைப்பாளர் பாமினி (மாவீரர் சந்திரனின் துணைவியார்), படைய புலனாய்வு பிரிவு மகிளீர் போராளி நளா (பிரிகேடியர் ஜெயமின் துணைவியார்), காவல்துறை மாவீரர் ஜெனீவாகரன், கடற்புலி மாவீரர் புகழொளி, கட்டளை தளபதி முகுந்தன், முறியடிப்பு பிரிவு கட்டளை தளபதி மாஸ், புலனாய்வுத்துறை அலுவலகப் பொறுப்பாளர் கதிர் போன்றோருக்கு நினைவேந்தல் இடம்பெறவுள்ளது.
மேலும், புலனாய்வுத்துறை தாக்குதல் அணி தளபதி குமணன், புலனாய்வு துறை வெளியாக பணிமனை பொறுப்பாளர் மேதினி ( மாவீரர் கபிலம்மானின் துணைவியார்), ராதா படையணி தாக்குதல் தளபதி தமிழ்வண்ணன்/வண்ணம், ராஜன் கல்வி பிரிவு பொறுப்பாளர் குமரன், அரசியல்துறை போராளி அன்பரசன், ராதா படையணி சிறப்பு தளபதி சிலம்பரசன்/சிலம்பு, தமிழீழ தேசியத் தலைவரின் மெய்காப்பாளர் அணி பொறுப்பாளர் சுவர்ணன், கடற்புலிகளின் தென் தமிழீழ தளபதியும் இறுதிப் போர்க்களமுனை தளபதியுமான சிறிராம், புலனாய்வு துறையின் வெளியக நடவடிக்கையின் பகுதி பொறுப்பாளர் அன்பு, கணினி பிரிவு போராளிகளான துவாரகா (தமிழீழ தேசியத் தலைவரின் மகள்), பார்த்தீபன் (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மனின் மகன்), மான்மதி (பிரிகேடியர் சொர்ணத்தின் மகள்), தமிழ்மதி (அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசனின் மகள்) ஆகிய 24 மாவீரர்களுக்கான இறுதி வீரவணக்க நிகழ்வு, தமிழ் மக்கள் செறிந்து வாழும் புலம்பெயர் நாடுகள்வாரியாக நடைபெறவுள்ளது.
வீரவணக்க நிகழ்வு
இறுதி மரியாதை செய்யும், வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 02/05/2026 (சனிக்கிழமை)அன்று கீழ்வரும் நாடுகளில் சமநாளில் இடம்பெற, தமிழீழ மாவீரர் பணிமனை சிறப்பான வகையில் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

ஆகவே எம்முயிரினும் மேலான தாய்தமிழ் உறவுகளே! தாய் நாட்டின் விடிவிற்காக உறுதி குலையாது, தமிழீழத் தேசியத் தலைவரின் கட்டளையை சிரமேற்று, களமாடி மாவீரர்கள் வரிசையில் தம்மையும் தாய்மண்ணுக்காக அர்ப்பணித்த இந்த வீரத்தளபதிகளுக்கும், ஏனை மாவீரச்செல்வங்களுக்கும் இறுதி மரியாதை செய்து, வீரவணக்கம் செலுத்த உங்கள் அனைவரையும் திரண்டு வந்து, இவ்வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மாவீரர் பணிமனையிராகிய நாம் அழைத்து நிற்கிறோம்” என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மாவீரர் பணியில் நாம் அனைவரும் இணைந்து பயணிப்போமாக" நன்றி தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகம்” .” என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |