தற்போது நாட்டுக்கு மாற்று அரசியல் அவசியம்! முன்னாள் பிரதமர் வெளியிட்ட கருத்து
தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியை புதிய உத்வேகத்துடன் மீளக்கட்டியெழுப்பி மாற்றுகட்சியின் இடத்தை நிரப்பிக் கொள்வதற்காக நாம் முயற்சிகளை எடுத்துள்ளோம் என்றும் எமது இந்த செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஐ.தே.க.வின் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமது பொறுப்புகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தனவும், உபதலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டாரவும், கட்சியின் பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் பதவியேற்றுக் கொண்டனர்.








