ஓய்வு பெற்ற விசேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்பினால் சலுகைகள் - சிறிலங்கா சுகாதார அமைச்சு
இலங்கையில், ஓய்வு பெற்ற விசேட வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்க சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும் தெரியவருவதாவது ,
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் வைத்தியர்கள் நாடு திரும்பாத நிலையில் சிறிலங்கா அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அதிருப்திக்கு இணங்க சிறிலங்கா சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
உத்தியோகபூர்வ வாசஸ்தலம்

தூரப் பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வைத்தியசாலைகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இல்லாத இடங்களில் வாடகை அடிப்படையிலேனும் வைத்தியர்களுக்கான வாசஸ்தலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மைக்குப் புறம்பானது

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் எமது நாட்டின் வைத்தியசாலைகளில் பணியாற்றவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.