இலங்கையில் பலவந்தமாக தகனம் செய்யப்படும் முஸ்லிம்களின் ஜனாஸா! பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் கொரோனாவால் பலியாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்து வருவதாக இஸ்லாமிய அடிப்படைவாத மத போதகர் எனக் கூறப்படும் மருத்துவர் சாகீர் நாயக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சாகீர் நாயக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் இதனை கூறியுள்ளார்.
அதில், இலங்கை அரசாங்கம் கொரோனாவால் பலியாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தகனம் செய்து வருகின்றது. உடனடியாக இந்த விடயத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் கொண்டு செல்ல வேண்டும். முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில்லை. இது சம்பந்தமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க கிறிஸ்தவ நாடுகளை இணைந்து செயற்படும் என எண்ணுகிறேன்.
உலகில் 57 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். உலகில் 2 பில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். முஸ்லிம்கள் உலக சனத் தொகையில் 25 வீதம் உள்ளனர். எனினும் துரதிஷ்டவசமாக முஸ்லிமகள் ஐக்கியமாக இல்லை.
முஸ்லிம்கள் நாடுகள் சுய நலத்திற்காக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு வருகின்றன. பண்டைய காலத்தில் போன்று முஸ்லிம் சமூகம் ஐக்கியமாக செயற்பட்டால், இந்த நிலைமையை மாற்ற முடியும் எனவும் சாகீர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாத மத போதகரான சாகீர் அப்துல் கரீம் நாயக் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தற்போது மலேசியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.