கொழும்பு மக்களிடம் இலங்கை விமானப் படை தலைமையகம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்
கொழும்பு வான் பரப்பில் ட்ரோன் கெமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை விமானப் படை தலைமையகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டின் 73ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வுக்கான ஒத்திகையில் விமானப் படை விமானங்கள் நேற்று (28) முதல் கொழும்பு வான் பரப்பில் தனது வான்சாகச ஒத்திகையை ஆரம்பித்துள்ளது.
இதனால் ஜனவரி 28ஆம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்படி வான் பரப்பில் ட்ரோன் கெமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் வேண்டிக் கொள்வதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
ஒத்திகை காரணமாக விமானப் படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் மிகவும் தாழ்வாக பறக்கின்ற நிலையில் ட்ரோன் கெமராக்கள், பட்டங்கள் மற்றும் பலூன்களை உயர பறக்கவிடுவதானது மேற்படி விமானங்களுக்கு பாரிய ஆபத்தாக அமையலாம் என்று தெரிவித்த அவர், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தவிர்க்கும் வகையிலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்