கைதை தடுக்கக் கோரிய வருண ஜயசுந்தரவின் மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
வருண ஜயசுந்தரவைக் தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபருக்கு உத்தரவு
மனுதாரரான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவை வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், காவல்துறை மா அதிபர் இது தொடர்பான பரிந்துரைகளை தேசிய காவல்துறை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக நீதியரசர்கள் ஆயத்திற்கு அறிவித்தார்.
இதற்கமைய, மனுதாரரை தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்ததை அடுத்து, இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை நிறுத்துவதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |