இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான யோஷித ராஜபக்ச
புதிய இணைப்பு
யோஷித ராஜபக்ச வாக்குமூலம் அளிப்பதற்காக சற்று முன்னர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச இன்று (17) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய கடற்படை பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர் நேற்று (16) ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்காக முன்னிலையாகவுள்ளதால் அவரால் முன்னிலையாக முடியாது என்று ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
முன்னாள் கடற்படை தளபதிக்கும் அழைப்பு
இதனையடுத்து, விசாரணைகளுக்காக இன்று முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அழைப்புக்கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அடுத்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் கடற்படை தளபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |