நீதிமன்றில் முன்னிலையாக தயார் : தேடப்படும் சட்டத்தரணி அறிவிப்பு
புதிய இணைப்பு
காவல்துறையினரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, இன்று (15) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தயாராக இருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி குணரத்ன வன்னிநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது, வன்னிநாயக்க சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபைஸ் முஸ்தபா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி மனுதாரரின் சட்டத்தரணியால் கோரும் இடைக்கால கோரிக்கையை தனது நீதிமன்றத்தால் ஏற்க முடியாது என்று கூறினார்.
மனுதாரரின் சட்டத்தரணி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது பொருத்தமானது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
பின்னர், இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விசாரிக்க இந்த மனுவை நாளை (16) பிற்பகல் 1.30 மணிக்கு விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு திகதியிட்டது.
முதலாம் இணைப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை பரிசோதகருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் சட்டத்தரணியை கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தனது சட்டத்தரணிகள் ஊடாக குறித்த சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
காவல்துறை மா அதிபர் மற்றும் கல்கிஸ்ஸை தலைமையக காவல்நிலை காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட சிலர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு
அண்மையில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில், காவல்துறை அதிகாரிக்கு அவருடைய கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, காவல்துறை தம்மை சட்டவிரோதமாகக் கைது செய்யத் தயாராகி வருவதாக சட்டத்தரணி வன்னிநாயக்க தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் வைத்து காவல்துறை பரிசோதகருக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பில் குறித்த சட்டத்தரணியை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
