கொரோனாவின் புதிய திரிபு - துறைமுகத்தின் ஊடாக இலங்கைக்குள் பரவ வாய்ப்பில்லை
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பரவும் சந்தர்ப்பம் இல்லை என துறைமுக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் உருவாகி உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு துறைமுகம் அல்லது விமான நிலையங்கள் ஊடாக நாட்டுக்குள் பரவக் கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுக சுகாதார அதிகாரிகள், துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள எவரும் துறைமுகத்திற்குள் வருவதில்லை எனக் கூறியுள்ளனர்.
அத்துடன் துறைமுகத்தில் இருந்து கப்பல்களுக்குள் செல்லும் அதிகாரிகள் சுகாதார பாதுகாப்பு உடைகளை அணிந்தே கப்பல்களுக்குள் செல்கின்றனர். சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைவாக செயற்படுவதால், துறைமுகத்தின் ஊடாக புதிய திரிபு நாட்டுக்குள் பரவாது என்பதை உறுதிப்படுத்த முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.