அனுமதி கிடைக்கும் வரை சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது -அரசாங்கம் அறிவிப்பு
கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் அனுமதி கிடைக்கும் வரை, சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் இன்றைய தினம் தயாரிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.
மேலும், சடலங்களை அடக்கம் செய்வதற்கு தேவையான இடம் மற்றும் அங்கு காணப்படக்கூடிய நீரின் தன்மை உள்ளிட்ட விடயங்கள் குறித்த வழிகாட்டல்களில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த விடயம் சேர்க்கப்பட்டதன் பின்னரே, சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பிலான வழிகாட்டல்கள் பூரணப்படுத்தப்படும் எனவும், தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் உள்ளடங்கிய கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணிக்கு இந்த வழிகாட்டல்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவ்வாறு யாரையேனும் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டால், குறித்த சடலங்களை குளிரூட்டி அறையில் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும், குறிப்பிட்டுள்ளார்.