கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணித்தாய் குழந்தை பிரசவித்த நிலையில் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாயொருவர், சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெற்கின் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
28 வயதான கர்ப்பிணித் தாய்க்கு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொபேயிகனே – பொரலுகொட பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு, கொவிட் தொற்று ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில், அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்தே, குறித்த பெண்ணுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சத்திர சிகிச்சையின் ஊடாக குழந்தை பிரசவம் இடம்பெற்றுள்ளதுடன், குழந்தை சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள்காட்டி அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த மூன்றாவது கர்ப்பிணித் தாய் இவர் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.