முதலைக்கு இரையான குழந்தை! அச்சத்தில் கிராம மக்கள்
மலேசியா சபா மாகாணத்தின் லகட் தாட்டு என்ற கடலோர பகுதியில் மீன்பிடித்து வந்தவர்களை முதலை தாக்கியுள்ளது.
சிறு படகு ஒன்றில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் இருந்துள்ளனர்.
முதலை தாக்குதலின்போது, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தந்தை கடுமையாக போராடிய போதும் குழந்தையை முதலை இழுத்துச்சென்றுள்ளது.
தலையில் முதலை கடித்தமையால் ஏற்பட்ட படுகாயங்களுடன் ஆற்றில் படகு கவிழ்ந்ததையடுத்து, குறித்த நபரை அப்பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
முதலை வாயில் குழந்தை

இறுதியாக அந்த முதலை, வாயில் குழந்தையோடு நீருக்கு வெளியே வந்த காணொளி அங்கிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து லகட் தாட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு முகமையின் தலைவர் சும்ஷோ ரஷீத் கூறுகையில்,"
குழந்தையின் தந்தை தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தையை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.குழந்தையின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்" என்றார்.
முதலையிடம் சிக்கும் அபாயம்

ஆட்கொல்லி முதலையின் தாக்குதலை அடுத்து, அக்கம் பக்கம் கிராமத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் பலரும் உணவுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் ஆற்றையே நம்பியிருப்பதால் அவர்கள் அப்பகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், முதலையிடம் சிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், தற்போதைக்கு ஆற்றுப்படுக்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்டபட்டுள்ளது.