ரஷ்யா - உக்ரைன் போரில் மீண்டும் பதற்றம்...! இரு பக்கமும் தீரமடையும் தாக்குதல்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள பரஸ்பரத் தாக்குதல்களில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைத் (Oil Refineries) தங்களது படைகள் வெற்றிகரமாகத் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ள பின்னணியில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் ரஷ்யாவின் யாரோஸ்லாவ் (Yaroslavl) பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸ்லாவ்நெப்ட்-யானோஸ் (Slavneft-Yanos) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சுத்திகரிப்பு ஆலை
தாக்குதலுக்குள்ளான இந்த ஆலை ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாகும்.
இது ஆண்டிற்கு சுமார் 1.5 கோடி (15 மில்லியன்) மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

ஆலையை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவற்றின் இடிபாடுகள் விழுந்ததால் எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் சேதமடைந்து நகரின் மேல் புகைமூட்டம் சூழ்ந்ததாகவும் யாரோஸ்லாவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவசர கால சேவை
இதேவேளை, உக்ரைனின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் உக்ரைனிய கோதுமையைச் சுமந்து சென்ற கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கார்கிவ் தொடருந்து நிலையத்தை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாலாக்கிலியா பகுதியில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர கால சேவைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |