ஒரே நாளில் சிறுவர்கள் உட்பட 114 பேரை சுட்டுக்கொன்ற மியான்மார் இராணுவம்! 12 நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மியான்மர் இராணுவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது.
இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் பிப்ரவரி மாதம் 2ஆவது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.
இந்த சூழலில் மியான்மர் இராணுவம் நேற்றுமுன்தினம் ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. இதையொட்டி அரசு டிவியில் உரையாற்றிய இராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்கள் தலையில் சுடப்படுவார்கள் என்றும் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.
அதனை மீறியும் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழக்கம் போல் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
அந்த நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உட்பட 40 இடங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
அமைதியாக தொடங்கிய இந்த போராட்டங்களில் திடீரென வன்முறை வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
இதையடுத்து போராட்டத்தை நசுக்குவதற்கு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதுவரை இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமாகவும் கண்மூடித் தனமாகவும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இராணுவ வீரர்கள் போராட்டக்காரர்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடந்த நாளிலிருந்து இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவர்.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் சிலரும் அடங்குவர். இதனிடையே மியான்மர் இராணுவத்தின் இந்த அடக்குமுறைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மியான்மர் இராணுவத்தை கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் ஐரோப்பிய கூட்டமைப்பும், ஐ.நா பொதுச்சபையும் மியான்மார் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டை வன்மையாகக் கண்டித்துள்ளன. 12 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், சர்வதேச தரங்களை பின்பற்றி அமைதியை உறுதி செய்வதும் மக்களை பாதுகாப்பதும் எந்தவொரு இராணுவத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
மாறாக சொந்த மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது. எனவே வன்முறையை உடனடியாக நிறுத்தவும் மக்களிடம் அதன் மரியாதை மற்றும் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க உறுதியாக செயல்படவும் மியான்மர் இராணுவத்தை கேட்டுக்கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மியான்மருக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மியான்மரில் கொண்டாடப்பட்ட 76ஆவது முப்படைகள் தினம், அந்த நாட்டுப் படைகளின் வன்முறை நிறைந்த அவமான தினமாக என்றென்றும் நிலைத்திருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘கடந்த மாதம் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராகவும், ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் சனிக்கிழமை மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கையை விளைவிக்கும் தொடர்ச்சியான இராணுவ ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதற்கு ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான சர்வதேச பதிலை அளிக்க வேண்டும். மேலும் இந்த நெருக்கடிக்கு அவசரகால தீர்வைக் காண்பது மிகவும் அவசியமானது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் உள்ள ஐ.நா. அலுவலகம், ‘‘சனிக்கிழமை நிகழ்ந்துள்ள ஒடுக்குமுறைக்கு தேவையற்ற உயிரிழப்பால் திகிலடைந்துள்ளது, வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’’ கூறியுள்ளது.