இலங்கையில் ஆலய சிற்ப வேலையில் ஈடுபட்ட இந்தியருக்கு ஏற்பட்ட துயரம்
இலங்கையில் ஆலய சிற்ப வேலையில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ளார். நுவரெலியா மாவட்டம் ஹைபோரஸ்ட் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் 3 ஆம் பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் தமிழ்நாடு, நன்னைலன் திருவூர் அகராதிவூர்நல்லன், இல, 60/1 வெஸ்ட் வீதியைச் சேர்ந்த பக்கிரிசாமி புருசோத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆலய சிற்பவேலை

ஹய்பொரஸ்ட் இல.03 பிரிவு நகரில் பழமையான ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய புனரமைப்புக்கு சிற்பி பணிக்காக இந்தியா தமிழ் நாட்டிலிருந்து பக்கிரிசாமி புருசோத்தமன்,மற்றும் சிங்காரவேலு வைத்தியநாதன் ஆகிய இருவர் 2022 பெப்ரவரி மாதம் வருகை தந்துள்ளனர்.
இவர்கள், இவ்வாலயத்தில் தங்கியிருந்து சிலை வடிவமைப்பு பணிகளை செய்து வந்துள்ளனர். நேற்றையதினம் பக்கிரிசாமி புருசோத்தமன் தனக்கு குளிராக இருப்பதாகவும் மயக்கம் வருவதாகவும் குடிக்க தண்ணீர் தரும்படியும் தனது சகாவிடம் கேட்டுள்ளார்.
தண்ணீர் கேட்டவர்

தண்ணீர் எடுத்து வரும் முன்னரே, இவர் மயங்கி விழுந்த நிலையில் ஊர்மக்கள உதவியுடன் ஹைபோரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு இவரை பரிசோதித்த வைத்தியர் இவர் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்த இந்திய பிரஜையின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.