யாழ்.ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு
ஜனாதிபதி மாளிகைகளை வாடகைக்கு எடுப்பதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பத்து முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருதாக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக (Anura Karunathilake) தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையை வாடகைக்கு எடுப்பதில் கனேடிய முதலீட்டாளர்கள் உட்பட ஐந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.பல்கலை
அத்தோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனமும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி பங்களாவை வாடகைக்கு எடுப்பதில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும், யாழ்.பல்கலைகழகத்திற்கு அந்த இடத்தில் செயல்பட ஏற்ற சூழல் இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி முடிவு
எனவே ஜனாதிபதி மாளிகையை சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பான விடயங்களை ஆராய ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் முடிவுகளின் அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அநுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
