பாரபட்சங்கள் தொடரத்தான் போகிறதா..!
இலங்கைத் தீவின் பேரவலத்திற்கும் பேரழிவுக்கும் பாரபட்சங்கள் அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்கு அநீதி என்ற போக்கு இலங்கையில் பன்னெடுங் காலமாக நிலவி வருகின்றது. அண்மையில் ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் நடந்த போராட்டத்திலும் இந்த நிலை வெளிப்பட்டு இருக்கிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமிக்கும் நில ஆக்கிரமிப்புப் போரை இன்னமும் சிங்களப் பேரினவாதிகள் தொடர்கின்றனர். இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் வரும் காலத்தில் இன்னமும் அந்த நெருக்கடி அதிகரிக்குமா என்ற அச்சமான நிலையிலும் இந்த ஆக்கிரமிப்பு தொடர்வதுதான் வேதனையானது.
மயிலத்தமடு பிரச்சினை
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப் பகுதியில், ஒரு போராட்டம் இடம்பெற்றது. மயிலத்தமடுவில் கால்நடைகளை வைத்திருக்கும் பண்ணையாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் பாரம்பரியமான தமது மேய்ச்சல் தரை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பட்டது. மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்த போராட்டத்தின் முக்கிய குரலாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தில் வேளாண்மையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மேய்ச்சல் தரையாக மயிலத்தனை காணப்படுகின்றது. சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இப் பகுதியில் தமிழர்கள் காலம் காலமாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். பெரும் வெளியாகவும் கால்நடைகளுக்கு உகந்த புல்வெளியையும் கொண்ட இப் பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகளை சுமார் ஆயிரம் பண்ணையாளர்கள் பண்ணை அமைத்து வளர்த்து வருகின்றனர். இது இப் பிரதேச மக்களின் பெரும் பொருளாதார அடிப்படையுமாகும்.
75 பேர் காணாமல் ஆக்கப்பட்டனர்
இந்த நிலையில் இலங்கை அரசு பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்ட எல்லைக் கிராமங்களில் காடுகளை அழித்து சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலங்களை ஆக்கிரமிக்கவே இந்த திட்டம் தீட்டப்பட்டது. 1995ஆம் ஆண்டில் இருந்து இந்தப் பகுதியில் நில ஆக்கிரமிப்பு காரணமாக தமிழர்கள் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மாத்திரம் சமார் 75 பேர் காணாமல் ஆக்கப்படடுள்ளனர். இராணுவத்தினர், இனவாதிகள், அரசு என்று பலமுனைகளில் இங்கே தமிழர்களுக்கு ஆபத்து விளைவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழர்களுக்கு எதிராக அட்டூழியங்களை விளைவித்த இத் தரப்பினர் அங்கு வரும் தமிழர்களின் கால்நடைகளையும் அழித்து பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் கால்நடைகள் மேய்கின்ற புற்தரைகளைக்கூட தீயிட்டு அழிக்கும் நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். மனிதர்களுக்கு மாத்திரமின்றி வாய்பேசாத ஜீவன்களுக்கும் அழிவுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்தும் பேரினவாதிகள் பேரினவாத வெறிக்காக இயற்கைமீதும் தாக்குதல்களையும் அழிவுகளையும் ஏற்படுத்துவதே இங்கு அதிர்ச்சியானது. இந்த நிலையில் தான் மயிலத்தமடு மேய்ச்சல் தரவை உரிமைக்கான போராட்டம் பல்வேறு தரப்பினரின் ஒன்றிணைவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேரரின் அநாகரிகச் செயல்
மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட சுமார் ஆயிரம் பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை இந்தப் போராட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முன்னெடுத்துள்ள கலகம் விளைவிப்பு தமிழ் மக்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததுடன் சிங்களப் பேரினவாத அதிகாரத் தொனியில் நடந்துகொண்ட காட்சிகளும் இலங்கை ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்களை அச்சுறுத்தும் தொனியிலும் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகப் போராட்டத்தை மிரட்டும் தொனியிலும் அவர் நடந்துகொண்டதுடன் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் மிகவும் கடுமையான முறையில் பேசியுள்ளார். அண்மையில் சிறிலங்கா அதிபர் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த வேளையில் குறித்த நிலப் பிரச்சினை தொடர்பில் கவனத்தை ஏற்படுத்தும் முகமாக தமிழ் தேசிய கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டன.
பேர்ள் குற்றச்சாட்டு
இந்த நிலையில் அன்று நடந்துகொண்ட நிகழ்வுகள் குறித்து பேர்ள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. அதாவது, “தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் நடத்திய விதத்திற்கும் பௌத்த மதகுருவை நடத்திய விதத்திற்கும் இடையிலான வித்தியாசம் அரசகட்டமைப்பிற்குள் ஆழமாக வேருன்றியுள்ள சிங்கள பௌத்த ஆதிக்கவாதத்திற்கான தெளிவான உதாரணம்” என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் குறிப்பிட்டுள்ளது இங்கே கவனத்திற்குரியது.

நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் குறித்து மட்டக்களப்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் பௌத்தமதகுரு அம்பிட்டிய சுமனரத்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் காணொளியின் வாயிலாக காவல்துறையினர் அமைதியாக குழப்பமடையாமல் காணப்படுவதாகவும் பேர்ள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழர்களிற்கு எதிரான காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் குறிப்பாக வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு எதிரான தாக்குதல்கள் பல வருடங்களாக தொடர்கின்றன எனவும் அவ் அமைப்பு கூறியுள்ளது.
இத்தனைக்குப் பிறகுமா?
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளின் முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னமும் தணியவில்லை. அதன் அச்சுறுத்தல் மேகங்கள் இன்னமும் கலையவில்லை. மீண்டும் எரிபொருளின் விலை மெல்ல மெல்ல உயர்கிறது. குறைந்த சீமெந்தின் விலை மெல்ல அதிகரிக்கிறது. வானுயர்ந்த நிலையில் வாழ்க்கைச்செலவு மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற அச்சத்தில் ஏழை எளிய மக்கள் இருக்கின்றனர். நாளாந்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை சமாளிக்க முடியாத பொருளாதார நிலை என்பது மிகப் பெரும் அச்சுறுத்தலாய் விரிந்துகொண்டே இருக்கிறது.

இப்படியான நிலையிலும் தமிழ் மக்களின் பொருளாதார உரிமையை அச்சுறுத்தும் விதமாக ஒரு தேரர் தும்புத்தடி, விளக்குமாறுகளுடன் காவல்துறை இட்ட காவல் வேலியின் மேல் ஏறி நிற்கிறார். இன்னொரு புறத்தில் உரிமைக்காக போராடிய மக்கள்மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கடந்த வருடங்களில் பால்மாவுக்கும் எரிபொருளுக்கும் உணவுப் பொருட்களுக்கும் வரிசையில் மக்கள் நாடு முழுவதும் நின்ற காட்சிகளை மறந்துவிட்டோமா? தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதால் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மாத்திரமின்றி இலங்கையின் பொருளாதாரத்தையும் இனவாதிகள் சீரழிக்கின்றனர் என்பதை உணர மாட்டார்களா?
இதேவேளை தமிழ் மக்கள்மீது அடக்குமுறைகளை விரித்தடி, சிங்கள இனவாதிகள் தமிழர்கள் மீது ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள களம் அமைக்கும் அரச எந்திரத்தின் போக்கு இந்த தீவில் இன்னமும் கொடூரமாகத் தொடர்கிறது. இதுவே நில ஆக்கிரமிப்புக்களையும் ஒடுக்குமுறைகளையும் இன்னமும் ஊக்குவிக்கிறது. “உள்நாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்குள் தீர்ப்போம், சர்வதேச தலையீடு வேண்டாம்” என்று மட்டக்களப்பில் அதிபர் ரணில் கூறியிருந்தார். ஆனால், இனத்திற்கொரு நீதி என்றால் எப்படி தமிழ் மக்கள் உள்நாட்டு பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியும்?
YOU MAY LIKE THIS
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 12 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 8 மணி நேரம் முன்