உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன் - 7 ஆண்டுகளாக மறுக்கப்படும் ஆங்கில மொழி கல்வி
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவனுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஆங்கில மொழி மூலக் கல்வி மறுக்கப்பட்டு வருவதாக குறித்த சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார்.
“ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்” என்ற தொனிப் பொருளின் கீழ் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று நேற்று (21.04.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது, கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அச்சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சிறுவனையும் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ள சிறுவனின் தங்கையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.
கல்வி கற்பிக்கும் வசதி
மேலும், குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சியில் 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இன்று வரையில் கைகூடவில்லை.
இந்நிலையில், தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கல்வி கற்று வருகின்றார்.
இதனால் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு வரும் தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு சிறுவனின் சிறியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |