பாதாள உலகத் தலைவர்களை விட ஆபத்தானவர் தேசபந்து தென்னகோன் : வெளியான அதிர்ச்சி தகவல்
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன்(deshabandu tennakoon), ஹரக் கட்டா மற்றும் மாக்கந்துரே மதுஷை விட ஆபத்தான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்(Dileepa Peeris) நேற்று(19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோன் காவல் துறையில் பணியாற்றும் போது தனிப்பட்ட இலாபத்திற்காக தனது அதிகாரத்தை பரவலாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக வழக்குத் தொடுப்புக்காக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
குற்றவாளிகளை விட மோசமானவர்
"அவர் ஒரு பேயைப் போல சமூகத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் 'ஹரக் கட்டா' மற்றும் 'மாக்கந்துரே மதுஷ்' போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விட மோசமானவர். அவர் தனது அதிகாரத்தை பரவலாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். எனவே, விசாரணைகள் முடியும் வரை அவரை பிணையில் விடாமல் விளக்கமறியலில் வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று பீரிஸ் கூறினார்.
தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து, இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டார். கிட்டத்தட்ட மூன்று வாரங்களாக சட்ட நடைமுறையை தவிர்த்து வந்த தென்னகோன், நேற்று முன்னதாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்தில் வாதங்களைமுன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பீரிஸ் கூறியதாவது:
காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதியற்றவர்
" கடந்த 20 நாட்களாக அதிகாரிகள் இந்த நபரைத் தேடி வருகின்றனர். இருப்பினும், அவர் பிடிபடுவதைத் தவிர்த்து, திடீரென இந்த நீதிமன்றத்தில் யாரும் கவனிக்காமல் முன்னிலையானார்.. இது விசாரிக்கப்பட வேண்டும். அவர் ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கு கூட தகுதியற்றவர், ஐஜிபி பதவிக்கு ஒருபுறம் இருக்கட்டும். இது காவல்துறை அதிகாரிகளுக்கு அவமானம்" என்று பீரிஸ் கூறினார்.
தேசபந்து தென்னகோனுக்கு எட்டு வீடுகள் சொந்தமாக உள்ளன என்றும், 2020 முதல் அவரது பெயர் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பீரிஸ் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தென்னகோன் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி வழக்கறிஞர் ஷனக ரணசிங்க, தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர், பிணை தொடர்பான முடிவு மார்ச் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அருண் இந்திரஜித் புத்ததாச தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்