இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி, சாரதி அதிரடியாக கைது!
பேராதனை (Peradeniya) பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தின் அபிவிருத்தி அதிகாரி மற்றும் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இருவரும் இலஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் தாவர வளர்ச்சி ஹோர்மோன்கள் தயாரிக்கும் தொழிலைப் பதிவு செய்வதற்கும் உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளின் மாதிரிகளை எடுப்பதற்கும் அதிகாரிகள் வந்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்குவதற்காக முறைப்பாட்டாளரிடமிருந்து 10,000 ரூபா கோரியுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்களும் முறைப்பாட்டாளரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
