ஆடம்பரமின்றி பக்தரோடு பக்தராக நின்று நல்லூரானை கட்டி வளர்த்த பெருந்தகை -மாப்பாண முதலியாருக்கு இரங்கல்
வரலாற்றுப் பெருமைமிக்க நல்லூர் கந்தப்பெருமானின் அறங்காவலராக கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணி ஆற்றிய பெருமகன் ஸ்ரீமான் குமாரதாஸ மாப்பாண முதலியாரின்( (Kumaradasa Mappana)) பிரிவு குறித்து மிகுந்த கவலையடைகின்றேன். எவ்வித ஆடம்பரமும் இன்றி பக்தரோடு பக்தராக நின்று ஆலயத்தைக் கட்டி வளர்த்த பெருந்தகையை இனி எங்கே காண்போம்.
இவ்வாறு நல்லூர் கந்தசுவாமி கோவில் அறங்காவலர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களின் பிரிவு குறித்து அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்(Thirumurugan) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனது சகோதரன் அமரர் சண்முகதாஸ மாப்பாண முதலியார் காலமான நாள்முதல் தனது உத்தியோகப் பதவி யாவற்றையும் துறந்து முழுநேரத் தொண்டராகத் தனது வாழ்வை அர்ப்பணித்த பெருமகன்.
எவருக்கும் அஞ்சாத தன்மகத்துவம் மிக்க ஆளுமையால் பல்வேறு திருப்பணிகளை நிறைவேற்றிய பெருந்தகையின் சாதனைகளை சொல்லிமுடிக்க முடியாது. நல்லூர் ஆலய ஒழுங்குகளை எவர் வருகைக்காகவும் மாற்றி அமையாது தெய்வசந்நிதிதானத்தில் அனைவரும் ஒன்றே என்ற அற்புதக்குறிக்கோளை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர்.
கண்ணை இமை காப்பது போல் ஒவ்வொரு விநாடியும் ஆலய ஒழுங்குகளை அவதானித்து அரிய பணி ஆற்றிய இப்பெருந்தகையை நல்லூர்க் கந்தப்பெருமான் தனது திருவடிக்கு அழைத்துவிட்டார். என்செய்வோம், அவது தூயபணியை நல்லூர் மரபுப்படி இளைய எஜமானார் தந்தையின் வழியில் நெறிப்படுத்தப் பிரார்த்திப்போம்.
எல்லாக் கோயில்களிலும் நல்லூர் கந்தனின் சிறப்பைப் பின்பற்ற வைக்க ஒப்பற்ற தலைமகனை அனைவரும் மீள நினைந்து பிரார்த்தித்து வழி அனுப்பிவைப்போம் என செஞ்சொற்செல்வர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.