வங்கி கணக்குகளே இலக்கு! கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதியதொரு டிஜிட்டல் மோசடி குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் பெயரிலோ வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக ஆபத்தான "apk" கோப்புகள் அனுப்பப்படுகின்றன.
இவை திருமண அழைப்பிதழ்கள், மின்சாரக் கட்டண விபரங்கள் அல்லது பரிசுப் போட்டிகள் போன்ற பெயர்களில் வரக்கூடும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
PDF கோப்பு
இவற்றை ஒரு புகைப்படம் என்றோ அல்லது PDF கோப்பு என்றோ நினைத்து கிளிக் செய்தால், அது உடனடியாக உங்கள் தொலைபேசியில் ஒரு மென்பொருளாக தானாகவே நிறுவிக்கொள்ளும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த மென்பொருள் ஊடாக ஹேக் செய்பவர்கள் கைபேசியை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் தொலைபேசிக்கு வரும் SMS மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கான OTP இரகசிய குறியீடுகளை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் வங்கி கணக்கிலுள்ள பணம் முழுமையாக கொள்ளையிடப்படும் அபாயம் உள்ளது.
அறிமுகமில்லாத இலக்கங்கள்
எனவே, அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்து வரும் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு "apk" கோப்புகளையும் தரவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம். மென்பொருள்களைப் தரவிறக்கம் செய்ய எப்போதும் உத்தியோகபூர்வமான Google Play Store அல்லது Apple App Store ஐ மாத்திரம் பயன்படுத்துங்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், தொலைபேசி அமைப்புகளில் உள்ள "Install Unknown Apps" என்ற தெரிவை முடக்கி வைத்திருப்பதை உறுதி செய்யவும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோசடிக்கு உள்ளாகியிருந்தால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதோடு, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்