மாங்குளத்தில் ஆரம்பமான இரண்டாம் நாள் திலீபனின் எழுச்சி ஊர்தி பயணம் (படங்கள்)
தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களால் நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தியின் இரண்டாம் நாள் பயணம் மாங்குளத்தில் இன்று (25) ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று (24) கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் எழுச்சி ஊர்தி கொடிகாமத்தில் இருந்து முழங்காவில் வெள்ளாங்குளம் மல்லாவி ஊடாக மாங்குளம் நகரை வந்தடைந்தது.
உணர்வுபூர்வமான அஞ்சலி
இந்த ஊர்தி பவனியின் இரண்டாம் நாளான இன்று (25) காலை மாங்குளம் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பழனியாண்டி நாகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க.சுகிர்தன் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

அதேவேளை, மக்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியை தொடர்ந்து ஊர்தி பவனியானது வவுனியா நோக்கி பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.












