இலங்கை - அவுஸ்திரேலியா இடையே நேரடி விமானச் சேவை! அரசாங்கத்தின் அறிவிப்பு
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் நேரடி விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்துகொண்ட அமைச்சர், கான்பெராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இப்பயணத்தின் போது இரு நாடுகளுடனான இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் RCEP முயற்சி
உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கையான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (RCEP) இலங்கையை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொள்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இந்த முயற்சிக்கு RCEP அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளான அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கையாகக் கருதப்படும் RCEP, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 15 நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |