எழுச்சி பாடல்களை பாடிய இளைஞனுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
எழுச்சி பாடல்களைப் பாடி அதனை சமூக ஊடங்களில் பகிர்ந்த கிளிநொச்சி இளைஞனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான குறித்த இளைஞன் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அதனையடுத்து, தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு, ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

குறித்த பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தென்னிலங்கையில் பலரும் கடுமையான விமர்சனங்களையும், இனவாத கருத்துக்களையும் முன் வைத்திருந்தனர்.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவினர், தொடர்புடைய இளைஞன், விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்கிறார் என தெரிவித்து கைது செய்து சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதனையடுத்து சாவகச்சேரி காவல்துறையினர் சந்தேகநபரான இளைஞனை இன்று(03) நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |