மன்னாரை உலுக்கிய இரட்டை கொலை - மேலும் நால்வர் சரணடைவு
மன்னார் வாள்வெட்டு
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 4 பேர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) காலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
சரணடைந்த குறித்த 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-06-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (19) உத்தரவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றின் உத்தரவு
இந்த நிலையில் இன்றைய தினம் சரணடைந்த 4 நபர்களையும் காவல்துறையினர் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இது வரை கொலை சம்பவம் தொடர்பாக 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

