மலினமான அரசியலை நிறுத்துங்கள் - அமைச்சர் டக்ளஸ் பதிலடி
சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுயநலன்களுக்காக கிளிநொச்சி வலைப்பாட்டு பிரதேசத்தினைச் சேர்ந்த கடலட்டை பண்ணையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய கூற்றுக்கு தன்னுடைய கண்டனத்தினை வெளிப்படுத்திய போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம்பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நிறுத்த வேண்டும்.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் கடற்றொழில் சார் பண்ணைகளை உருவாக்குவது தொடர்பாக விரைவான வேலைத் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கின்ற நிலையில், கடலட்டைப் பண்ணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருப்பது வியப்பாக இருக்கிறது.
அவ்வாறான கீழ்த்தரமான அரசியல்வாதியாக நான் என்றைக்குமே செயற்பட்டதில்லை என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.