பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் மீட்கப்பட்ட போதைப்பொருள் - வெளியான பகீர் தகவல்
மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்திற்கு சற்று தொலைவில் உள்ள கல்லூரி ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகளும் 37 போதை மாத்திரைகளும் அதனை நடத்தும் பெண்ணை சிக்க வைக்க திட்டமிடப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெண்ணை சிக்க வைக்க முயற்சி
குறித்த பெண்ணை சிக்க வைக்க திட்டமிட்டதாக கூறப்படும் நபர் மற்றும் அதில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் திட்டமிட்ட நபர் மற்றும் இதில் பங்குபற்றியவர்களை கைது செய்ய மேற்கு வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் பணிப்புரையின் பேரில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த உணவகத்தில் போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கம்பஹா பிரிவுக்குட்பட்ட காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல் பரிசோதகர் அவற்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரிக்கும் தொடர்பு
குறித்த பெண்ணை உணவகத்தில் சிக்க வைக்க திட்டமிட்ட நபரும் இந்த உப காவல் பரிசோதகரும் நெருங்கிய நண்பர்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் திட்டமிட்ட நபரின் வேண்டுகோளுக்கு இணங்க உப காவல் பரிசோதகர் தலையிட்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உப காவல் பரிசோதகர் குறித்தும் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.