அதிகாரிகள் மீதான மரணதண்டனை தீர்ப்பால் முன்னாள் ஜனாதிபதிக்கு காய்ச்சல் : ஸ்ரீநேசன் எம்.பி கிண்டல்
ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப்பணம் செலுத்திய தமக்கு அந்த தண்டனை கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நினைத்திருப்பார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை(01.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நினைத்தால் வேதனை தான். இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள்.

ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போதும் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுக்கவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே ஒரு பக்கம் அவரையும் அவரது குடும்பத்தையும் நினைத்து சற்று வேதனைப்பட்டாலும் 269 அப்பாவி மக்கள் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் கடமையை சரிவர செய்யவில்லை அதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் சிலருக்கு கலக்கம்
இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் காவல்துறை மா அதிபர் ஏழரைக் கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தண்டப் பணம் செலுத்தியவர் இருக்கின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி

அவர் இப்போது சிந்திப்பார் ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என சிந்திப்பார்.
அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கலக்கம். தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும். ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |