பன்குளம் பகுதியில் மாடுகள் இறப்பும் : கிழக்கு மாகாண கால்நடைத் திணைக்களத்தின் பாராமுகமும்
திருகோணமலை மாவட்டம் மொறாவே பிரதேசெயலக பிரிவில், பன்குளம் பகுதியில் கடந்த பல மாதங்களாக மாடுகளுக்கு நோய் ஏற்பட்டு பல மாடுகள் இறந்திருப்பதுடன் தற்போதும் இறந்து கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக அந்தப் பகுதி கால்நடை வைத்தியருக்கு பொதுமக்களால் அறிவித்தும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் தரப்பில் வாகனவசதி இல்லை என்றும், வழங்கப்பட்ட வாகனம் வேறு பகுதிக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் காரணம் கூறப்பட்டு , வைத்தியரின் களவிஜயம் தவிர்க்கப்பட்டு வந்தது. இதனால் மாடுகளின் இறப்பு, அப்பகுதியில் தொடர்ந்து வருகிறது.
அந்த கிராமத்தின் அபிவிருத்தியில் பங்காற்றிவரும் புலம்பெயர் இலங்கையரால், குறித்த விடயம் தொடர்பாக, மாகண விவசாய அமைச்சின் செயலாளர், ஆளுநர், துறைசார் அமைச்சர் லால்காந்த ஆகியோரின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக தற்போது மூவர் அடங்கிய விசாரணைக்குழு ஒன்று திணைக்களத்தால் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் குறித்த விசாரணைக்குழுவில் உள்ள ஒரு பெண் விசாரணை அதிகாரி முறைகேடாக, பன்குளம் பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்களிடம் பேசி தொலைபேசி உரையாடல்களை குறித்த மக்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக பதிவேற்றி வருவதாக அறியப்படுகிறது.
இது விசாரணைக்குழுவின் ஒழுக்கவியல் முறைமைக்கும் நம்பகத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் குந்தகம் ஏற்படுத்தக் கூடியது. இது விசாரணைக் குழு பற்றி பொதுமக்கள் மத்தியில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தவல்லது.
கடமையில் உள்ள பல்வேறு கால்நடை வைத்தியர்கள் மிக கடமை உணர்வோடு பணியாற்றுகின்ற போதிலும் ஒரு சில வைத்தியர்களின் கடமையீனங்கள் கவலைக்குரியதொன்றாக மாறுகின்றன.
மொறாவே பகுதிக்கான கால்நடைத்திணைக்கள அலுவலகத்தின் அமைவிடம் கூட பொருத்தமான இடத்தில் அமையப்படவில்லை என்ற கருத்தும் பொதுவாக மக்களிடத்தில் உண்டு.
பொதுப் போக்குவரத்து வசதியோ ஏனைய வசதிகளோ மக்கள் அலுவலகத்திற்க்கு சென்று வரக்கூடிய வகையில் இல்லை. இது தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்க்கொண்டு திணைக்களம் தலைமையதிபதி, பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அண்மையிலும் கூட பாலத்திற்கு அண்மையில் ஒரு மாடு நோய் காரணமாக இறக்கும் நிலையில் காணப்பட்ட போதும், காவல்துறையினரின் பங்களிப்போடு , அது பின்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
அந்தப்பகுதி கிராம அலுவலரும் மிகச் சிறப்பாக மக்களை அறிவுறுத்தி வருகிறார். இருந்த போதிலும் சில பிரதேசங்களில் மாடுகள் இறப்பினால், அவை சரியாக புதைக்கப்படாதால், அல்லது அநாதரவாக காட்டுக் கரைகளில் மாடுகள் இறந்து, அப்பகுதிகளில் தூர்நாற்றும் வீசுகிறது.
இவை அப்பகுதியின் சுகாதார நிலைமைகளை சீர்குலைக்கும். இது தொடர்பான விழிப்புணர்வுகளை கால்நடைத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவூட்டும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பொது மக்களின் வரிப்பணத்தில் பல்கலைக்கழகங்களில் கால்நடைவைத்தியர் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து அந்த மக்களுக்காக சேவையாற்ற அரசு நியமனங்களை வழங்குகின்றபோது அந்த மக்களின் வரிப்பணத்தில் தான் ஊதியம் பெறுகின்றோம் என்ற உள்ளுணர்வோடு அரச சேவையாளர்கள் பொதுமக்களுக்காக சேவையாற்றும் போதுதான் அந்த அரச சேவைக்கு மகிமை உண்டாகும்.
விசாரணைக்குழுக்கள் குற்றவாளிகளாக பொதுமக்களை முன்னிறுத்தினால் அது குறித்த திணைக்களத்தின் வினைத்திறனின் தோல்வியே அல்லாமல் பொதுமக்களின் தோல்வி அல்ல.
அரச அதிகாரிகளின் அதிகார மதைகள் சில நாடுகளில் அருகிவிட்டன. அதனாலேயே அவை அபிவிருத்தி அடைந்த நாடுகளாக மாற்றம்பெற்றன. ஆனால் 3ம் வலய நாடுகளின் அபிவிருத்தியில் மக்களுக்கான சேவையாக அரச சேவை மாறும் போதே அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும்.
குறிப்பாக மாடுவளர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபடுகின்ற மக்களை அறிவூட்டம் செய்கின்ற செயற்திட்டங்கள், கூட்டங்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பன திணைக்களத்தால் செய்யப்படவேண்டியவை.
அத்தோடு மனிதர்களுக்கு வைத்தியம் செய்யும் வைத்தியர்களை விட கால்நடைகளுக்கு வைத்தியம் செய்பவர்கள் சற்று வேறுபடுகிறார்கள். மனிதர்கள் பேச்சாற்றல் உள்ளவர்கள், கால்நடைகள் வாய் பேச முடியாத மிருகங்கள் அவை தமது மனிதர்களைப் போல உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தக்கூடியன அல்ல. அவை ஜீவகாருண்யத்தோடு அணுகப்படவேண்டியவை.
அதனால் தான் கால்நடை வைத்தியர்களில் பெரும்பாலோனர் காருண்யம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எனவே தொட்ர்ந்து மாடுகள் இறப்பதனை கட்டுப்படுத்த கால்நடைத் திணைக்களம் விசேட நிபுணர் குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்