பிரித்தானிய பொதுத்தேர்தலில் களமிறங்கும் ஈழத்தமிழர்: எம்பி ஆகும் வாய்ப்பு
பிரித்தானியாவில் (UK) இந்தமுறை இடம்பெறும் பொதுத்தேர்தல் (General Election) ஊடாக ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக உருவாகும் நிலைமை நிதர்சனமாகி வருகிறது.
எதிர்வரும் யூலை 4 இல் இடம்பெறும் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி பெருவெற்றிபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழிற்கட்சியின் பிரகாசமாக வெற்றிவாய்ப்புத் தொகுதியில் லண்டன் தமிழர்கள் பெரிதும் அறிந்த இளம் அரசியல்வாதியான உமாகுமரன் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாகவும் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் ஸ்ராட்போட் அன்ட் பாவ் தொகுதியில் உமாகுமரன் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் சென் கந்தையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கயைில் ”தொழிற்கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் உமாகுமரன் இந்த தொகுதியில் தமது கட்சியின் சார்பில் நிறுத்தப்படுவது குறித்த அறிவிப்பை தொழிற்கட்சி நேற்றிரவு வெளியிட்டதுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருந்தது.
இந்த தேர்தலில் தொழிற்கட்சி ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த இரண்டு பெண்வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இதில் கிறிஸ்னி ரசிகரன் சட்டன் அன்ட் சீம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த தொகுதி லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியின் ஆதரவுபெற்ற தொகுதியாக இருப்பதால் கிறிஸ்னியின் வெற்றிக்கான ஆதரவு அதிகமாக தேவைப்படுகிறது.
ஆனால் உமாகுமரன் களமிறக்கப்பட்ட தொகுதி பாரம்பரியமாக தொழிற்கட்சி வெற்றிபெறும் கோட்டையாக இருப்பதால் உமாகுமரன் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |