அரசியல்வாதிகள் மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போன்றவர்கள் - குற்றம் சாட்டும் பௌத்த பிக்கு
எதிர்வரும் ஓரிரு மாதங்களில் அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம் ஆகியவற்றை அதிக அக்கறையுடன் பேசுவார்கள்.
இவர்கள் மழைக்காலத்துக்கு வெளிவரும் அட்டை பூச்சிகளை போன்றவர்கள் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளே காரணம்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ”நாட்டின் வங்குரோத்து நிலைக்கு அரசியல்வாதிகளே காரணம். ஆனால் பொருளாதார பாதிப்பு சுமையானது ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் நடுத்தர வர்க்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.
13 ஆவது திருத்த நடைமுறையாக்கம்

கடன் பெறுவதையும் மிகுதியாக உள்ள தேசிய வளங்களை ஏலத்தில் விடுவதையும் தவிர இந்த அரசாங்கத்திடம் பொருளாதார மீட்சித் திட்டங்கள் எதுவும் கிடையாது.
நாட்டின் வங்குரோத்து நிலையின் பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறையாக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாங்களும் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு செயற்படுவோம்.
தேர்தல் நெருங்கும் போது அரசியல்வாதிகள் தேசியம், புத்தசாசனம், பாதுகாப்பு, இனம் தொடர்பில் கருத்துரைத்துக் கொண்டு மழைக்காலத்துக்கு வெளியில் வரும் அட்டைப் பூச்சிகளை போல் வெளிவருவார்கள்.
பெரும்பான்மையின மக்கள் இம்முறை சிறந்த தீர்மானத்தை எடுக்காவிட்டால் 2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் இல்லாதொழிக்கப்படும்.” என்றார்.