“ஈழத்தமிழர் போராட்டம் அழிந்து விடவில்லை - திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள்” அகிலத்தை அதிரவைத்த ஈழவர் குரல்கள்
அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 இற்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய வெற்னா மாநாட்டில் ஈழவர் குரல்கள் அகிலத்தையே அதிரவைத்துள்ளது.
வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான FeTNA , அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ் அமைப்புகளின் இலாப நோக்கற்ற அமைப்பாகும். பதிவு செய்யப்பட்ட இச் சங்கமானது முதலில் ஐந்து தமிழ் அமைப்புகளால் 1987 இல் நிறுவப்பட்டது.
அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்ட 60 மேற்பட்ட தமிழ் அமைப்புகளை அது உள்வாங்கி, அவற்றையும் அதில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆண்டுதோறும் வட அமெரிக்காவின் வெவ்வேறு மாநகரங்களில் ஜூலை மாதத்தில் பிரமாண்டமான தமிழ் மாநாடுகளை நடத்தி வருகின்றது.
விசேட விருந்தினர்களாக துறைசார் ஆளுமைகள்
இதற்காக உலக மடங்கிலுமிருந்து துறைசார் ஆளுமைகள் விசேட விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றார்கள். தமிழ் எழுத்தாளர்கள், நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், எனப் பல ஆளுமைகளின் சங்கமம் இது.
இம்முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த பிரமாண்ட மாநாட்டில் கனடாவில் அமைய இருக்கும் தமிழன அழிப்பு நினைவுத் தூபி காட்சிப்படுத்துவதற்கு சிறப்புச் சாவடி ஒன்று ஒதுக்கப்பட்டு சிறப்பளிக்கப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோப இலட்சம் ஈழத் தமிழரை நினைவு கூர்வதற்கான நினைவுத் தூபி பிரம்டனில் உருவாகவுள்ளது.
பன்னாட்டுத் தமிழர் கருத்தாடல் நேரம்
வெற்னா மாநாட்டின் மணி மகுடமாக விளங்குகின்ற பன்னாட்டுத் தமிழர் கருத்தாடல் நேரம் (world Tamil hour) எனப்படுகின்ற துறைசார் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளுகின்ற அந்த மாபெரும் உரைவீச்சு நிகழ்வில் ஈழ இன அழிப்பின் காணொளி ஒளிபரப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபியின் அவசியம் தொடர்பாகவும், தமிழ்க் குழுமங்கள் அதனை அமைக்கும் பணிக்கு எவ்வாறு உதவிடலாம் என்பது தொடர்பாகவும் அமலீதன் உரையாற்றியுள்ளார்.
மேலும் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், தமிழ்ச்செயற்பாட்டாளர்கள் வேலன் சுவாமி, கத்தோலி்க்க திருச்சபையின் பேராயர் ஆண்டகை Christian Noel Emmanuel, தமிழக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சமூக நீதிப் போராளியுமான தொல். திருமாவளவன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசின் பிதாமகன் உருத்திரகுமாரன் உள்ளிட்ட பலர் உரைகளை அங்கு நிகழ்த்தியுள்ளனர்.
தமிழரின் உரிமைக்காக களமாடிய விடுதலைப்புலிகளை அழித்து முள்ளிவாய்க்காலில் 2009 இல் மிகப்பெரிய தமிழினவழிப்பை சிங்கள தேசம் தமிழர்கள் மேல் நிகழ்த்தியது. அதற்கான நீதிக்காகவே நாம் புலத்தில் நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவினோம். தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் மட்டுமே என்று மிக உணர்வோடு உருத்திர குமாரன் பேசியுள்ளார்.
ஈழத்தமிழர் போராட்டம் அழிந்து விடவில்லை
தமிழ் இனவழிப்பிற்குப் பின் சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசு, தன் பெளத்தமதச் சின்னங்களை தமிழர் தேசத்தில் நிறுவி கண்ணுக்குத் தெரியா இன வழிப்பை தினமும் நடாத்திய வண்ணமேயுள்ளது என்று திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
திறந்தவெளிச் சிறையில் தமிழர்கள்
நல்லூர் சிவ ஆதீனத் தலைவரும், தமிழின உணர்வாளரும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழின எழுச்சிப் பேரணியின் மூலவரகளில் முதன்மையானவருமான தவத்திரு வேலன் சுவாமிகள் முள்ளிவாய்க்காலில் அனாதரவாக கொல்லப்பட்ட 11/2 இலட்சம் அப்பாவித் தமிழர்களுக்குமான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை என்று உணர்வோடு கருத்துரைத்துள்ளார்.
தனித்துவ அடையாளங்களோடு நடைபோட வேண்டிய காலம் இது
கிளிநொச்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தனதுரையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த உலகில் மிக கொடூரமாக படுகொலை செய்யப் பட்ட இனம் நாங்கள்.இந்த அவலத்திலிருந்து நிமிர்ந்து நம் தனித்துவ அடையாளங்களோடு நடைபோட வேண்டிய காலம் இது என்று உணர்வோடு உரையாற்றியுள்ளார்.
