மனுஷ நாணயக்காரவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
புதிய இணைப்பு
இஸ்ரேலில் வேலைக்கு ஊழியர்களை அனுப்புவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைக்கு ஊழியர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (15) காலை முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் அவர் முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்றாம் இணைப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று (15) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் (CIABOC) முன்னிலையான போது அவர் இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.
குறித்த விடயத்தை களத்தில் இருக்கும் எமது செய்தியாளரும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) சற்று முன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் முறையற்ற வகையில் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (15) குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனுஷ நாணயக்காரவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேற்று(14) கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில், தனது கட்சிக்காரர் இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குச் சென்று வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிவித்திருந்தார்.
வாக்குமூலம் அளித்தல்
அதற்கமைய வாக்குமூலம் அளிப்பதற்காக மனுஷ நாணயக்கார இன்று முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மீது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
