துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் தவறான செய்தி! குடும்பத்தினர் கவலை
எமது பிள்ளையை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவதால் , பிள்ளையை இழந்து வாடும் எமக்கு அந்த செய்திகள் மிக மனவருத்தத்தை தருகிறது என அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் வீட்டார் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்றே அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார். ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால் , வாகனத்தை கொடுத்தார்.
துப்பாக்கி பிரயோகம்
காவல்துறையினர் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டான்.ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன.

எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை. அந்த கோவத்தில் , மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டான்.
அது தொடர்பில் அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள். அது மாத்திரமே அவனுக்கு எதிரான காவல்துறை முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன.
வெளிவரும் செய்திகள்
தற்போது மகன் தொடர்பில் ஊடகங்களில் வந்த செய்திகள் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் கேட்டோம். அந்த ஒரு முறைப்பாட்டை தவிர வேறு எந்த முறைப்பாடும் இல்லை என கூறினார்கள்.

ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் நாம் சொன்ன போது , ஊடகங்களில் வாற செய்திகளுக்கு நாம் என்ன செய்ய முடியும் ? என எம்மிடம் காவல்துறையினர் திருப்பி கேட்கின்றனர்.
மகனை இழந்து வாடும் எங்களுக்கு மகன் தொடர்பில் வெளிவரும். செய்திகள் மிக வேதனையளிக்கிறது” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |