காணாமற் போனவர்கள் தொடர்பில் பொய்யான புள்ளி விபரங்கள் - அரசாங்கம் அறிவிப்பு
ஸ்ரீலங்காவில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பலர் பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிட்டு நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முனைவதாக, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை, காணாமல் போனவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையுடனான புள்ளிவிபரங்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டே நட்டஈட்டை வழங்குதல் மற்றும் மரணச்சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. வாய்மூல கேள்வி பதிலின் பின்னர், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்த சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் திருத்தம் சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில், நீதியமைச்சர் அலி சப்ரி இந்த பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யாரும் காணாமல்போகவில்லை. இந்த நாட்டை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படும் ஒரு தரப்பினர் பொய்யான தகவல்களுடன் கருத்துக்களை வெளியிடுகின்றனர். 20, ஆயிரம் 30 ஆயிரம் மக்களை காணவில்லை என பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர். எனினும் 2009ஆம் ஆண்டிலிருந்து உண்மையில் எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்ற தகவல்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
ஆகவே அவ்வாறு உண்மையிலேயே காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டையுட் வழங்க நாம் குறித்த அலுவலகத்தை ஊக்குவிக்கின்றோம். கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் சிறைச்சாலைகளை கண்காணிக்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமது அரசியல் யாப்பிற்கு அமைய கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும். நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மாதத்திற்கு ஒரு தடவையேனும் அவர்கள் பணியாற்றும் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள சிறைச்சாலைககளுக்குச் சென்று கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய வேண்டும். இதற்கமைய சட்டத்தில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளோம்.
இலங்கையில் நல்லிணக்க செயன்முறை தடம் புரளவில்லை, அது பலப்படுத்தப்படுகிறது. காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடு அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மூன்று நிறுவனங்களும் தங்கள் சேவைகளைத் தொடர்வதை உறுதிசெய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன.
சில எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப குறித்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னைய அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் தலைவர் பதவி விலகிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.