கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை - யாழில் மக்களை அணிதிரள கோரிக்கை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.08.2026) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு செய்யப்படவுள்ளது.
நீதிக்கான நீள்பயணம்
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக ஊடக சந்திப்பில் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |