நாய்க் குட்டியால் உயிரிழந்த குடும்பஸ்தர்!
மூன்று மாத நாய்க் குட்டியின் நகக் கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா எனும் 48 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாதகாலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தினால் கீறியுள்ளது. நகத்தினால் கீறி இரண்டு நாட்களின் பின்னர் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் நாய்க்குட்டி நகத்தினால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சைபெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நேற்றைய தினம்(14) நீர்வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து அவரை குடும்பத்தினர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார். பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.