இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது!
நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு வயது குழந்தையின் மரணத்தை மறைத்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
4 வருடங்கள் தலைமறைவாகியிருந்த தந்தையும் மகளும் பதுளையில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் மரணம்

குறித்த தந்தையும் அவரது மகளும் இருந்த வீட்டிற்கு குழந்தையின் தாய் சென்றுள்ளார், தாயின் பின்னால் குறித்த குழந்தையும் சென்றுள்ளது.
அந்த சமயம் கைது செய்யப்பட்ட பெண் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் குழந்தை மோதி உயிரிழந்துள்ளது.
பாரவூர்தி மோதியதால் குழந்தை உயிரிழந்ததாக குறித்த பெண்ணும், அவரது தந்தையும் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மருத்துவ அறிக்கை மற்றும் காவல்துறை விசாரணைகளின் அடிப்படையில், பாரவூர்தியில் மோதி சிறுமி இறக்கவில்லை என குறித்த சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தந்தையும், மகளும் குழந்தையின் மரணத்துக்கு காரணம்

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் சிறிய வாகனம் ஒன்றிலே குழந்தை மோதி இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் சந்தேக நபரான தந்தையும், மகளும் குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்பதோடு அதை மூடி மறைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதன்படி, பதுளை – முத்துமால கிராமத்தில் வைத்து 78 வயதுடைய சந்தேகநபரையும் 43 வயதான அவரது மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டநிலையில், அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.